LabTap (லப் டப்) - the heart beat of an empty vessel

Tuesday, May 22, 2007

கோவை பதிவுப் பட்டறையும் ஒரு கத்துக்குட்டியும்

பதிவுகளை பல காலம் படித்துக்கொண்டும், சில காலமாக இந்த கவிதைப் பதிவை எழுதிக்கொண்டுமிருக்கிறேன். இந்நிலையில் பதிவர் பட்டறை (Workshop) ஒன்றை என் சொந்த ஊர் கோவையில் 'தல' பாலபாரதி நடத்தினார். என்ன நடக்கிறதென்று பார்ப்போம் என சென்றேன். அந்தப் பட்டறையைப் பற்றி இந்த கத்துக்குட்டியின் குறிப்புகள்.

முதல் நிகழ்ச்சி:
சினிமா இசைத் துறையை சேர்ந்த திரு.ஆறுமுகம் அவர்களுடன் ஒரு நேர்க்கானல். பேட்டி எடுத்தவர் எழுத்தாளர் பாமரன் ( இவரின் இயற்பெயர் எழில்கோ)

ஆறுமுகம் சினிமா/இசைத்துறை பற்றி பேசியதில் சில கருத்துக்கள்:
1) தமிழக சினிமா 1930-40 களிலேயே இந்திய சினிமாவிற்கு முன்னோடியாக இருந்தது - இன்று கூட ஹிந்திப் படங்களுக்கு இருக்கும் பட்ஜெட்டில் பாதியாவது தமிழ் படங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக பாலிவுட்டை கோடம்பாக்கம் எளிதில் வென்றுவிடும் என்று நான் நினைக்கிறேன்.
2) இசையின் தரமும் பாடல் வரிகளின் தரமும் குறைந்து வருகிறது.
3) இசையமைப்பாளராக இருக்க சாஸ்த்ரீய சங்கீத தெரிய வேண்டும் - இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. பட்டறையில் பங்கேற்ற பலரும் ஒத்துக்கொள்ளவில்லை. எப்படி சங்கீதம் கற்கிறார் என்பதைவிட எப்படிப்பட்ட இசையைத் தருகிறார் என்பதே இசையமைப்பாளருக்கு முக்கியம் என்பது என் கருத்து. அதை எதிரொலிப்பது போல் "நம் அம்மா முறையாக சமையல் பயிலாமலே சமையல் கலை படித்த Chef களை விட நன்றாக சமைக்கிறார்களே?" என்று பார்வையாளர்களில் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
( ஆறுமுகம் அவர்கள், தற்போதைய இசையமைப்பாளர்களில் வித்தியாசகரே சாஸ்த்ரீய சங்கீதம் கற்றிருக்கிறார் அதனால் அவரே பிடிக்குமென்றார். ஆனால் பாமரனோ "சாதரண மக்களும் ரசிக்கும்படி இசையின் கதவுகளை எல்லோருக்கு திறந்து விட்ட இளையராஜா பிடிக்கும்" என்றார்).
4) தற்பொழுது இந்தி சினிமா மட்டுமே இந்திய சினிமாவாக வெளிநாடுகளில் காட்டப்படுகிறது.

பாமரன் அவர்கள் நேர்காணலை எடுத்துச் சென்ற விதம் மிக அருமை. காரணம், அவரின் நகைச்சுவை கலந்த பேச்சு.
உதாரணத்திற்கு, ஆறுமுகம் வயதானதால் தனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று கூறிய போது, "இந்தக் கால சினிமா பாடல்கள் கூட காரணமாயிருக்கலாம்" என்று கூற, அறையில் பலத்த சிரிப்பொலி .


இரண்டாவது நிகழ்ச்சி:
பேராசிரியர் ரமணியின் "பின் நவீனத்துவம் (Post-Modernism )" பற்றிய விரிவுரை. இதில் எனக்கு அறிமுகமில்லாததால் இதைப் பற்றி எழுதப்போவதில்லை. ஆனால் பேராசிரியரின் உரையின் நடுநடுவே கேள்விகளைக் கேட்டு என் அறியாமையை விளம்பரப்படுத்திக்கொண்டேன்.


மூன்றாவது நிகழ்ச்சி :
தமிழில் வலை பதிய பன்படும் மென்பொருள்களைப் பற்றிய முகுந்து அவர்கள் நடத்திய ஒரு அறிமுகப் படலம் (Training Demo). எ-கலப்பை உருவக்கியவர் இவர்தான். நான் எ-கலப்பையை தினமும் பயன்படுத்துவேன். அதை உருவாக்கியவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. எ-கலப்பை மென்பொருள் உருவாக எப்படி அவரும் அவருடைய "எறும்பு" குழுமத்தினரும் உழைத்தார்களென்றும், எ-கலப்பையில் இருக்கும் "Keyman" மென்பொருளிற்காக எப்படி பல தமிழ் ஆர்வலர்களிடமிருந்து 500 டாலர்கள் (1990களில்) திரட்டினார் என்றும் கூறினார்.
அவருக்கும் அவரோடு சேர்ந்து எ-கலப்பையை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி. பிறகு மா.சிவக்குமார் சில மென்பொருட்களைப் பற்றி விளக்கினார்.

பாலபாரதியிடம் நான் கேட்ட கேள்வி:
எனக்கு பட்டறை ஆரம்பித்தபொழுதிலிருந்தே இருந்த சந்தேகத்தை பாலபாரதியிடம் கேள்வியாகக் கேட்டேன்:
"இப்படிப்பட்ட பட்டறைகளை நிகழ்த்துவதன் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்?" அதற்கு பாலபாரதி இணையத்தில் இருக்கும் வலைப்பதிவர்களிடையே சமுதாயத்தைப் பற்றிய உரையாடலைத் துவக்கி வைக்க நினைப்பதாக கூறினார். மேலும் மா.சிவக்குமார், OpenSource Softwares மற்றும் இணையம் (Internet) ஆகியவை எப்படி சிறு சிறு தன்னார்வலர்களின் முயற்சியால் பெரிதாக வளர்ந்துள்ளதோ அது போல் இணையத்தில் உள்ள தமிழ் எழுத்தாளர்களும் மென்பொருள் நிபுணர்களும் இணையத்தில் தமிழ் வளர அவர்களால் முடிந்த பங்கை செய்ய வேண்டுமென்றார்.

(என் புரிதலில் ஏதேனும் தவறிருந்தால் திருத்தவும்)

இந்தப் பட்டறையை சிறப்பாக நடத்த உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

Labels: , ,

3 Comments:

  • நண்பா, பதிவுக்கு நன்றி. தங்களைச் சந்தித்ததும் மகிழ்ச்சி. உங்களது ஹைக்கூ கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அருமை. நிச்சயம் தங்களின் பாலபாரதி மற்றும் மா.சி உடனான கவிதைப் பற்றிய உரையாடல்கள் தங்களுக்கு உற்சாகத்தை நிச்சயம் கொடுத்திருக்கும்.

    By Blogger வினையூக்கி, At May 22, 2007 at 7:35 AM  

  • //உங்களது ஹைக்கூ கவிதைகளை
    வாசித்துக் கொண்டிருந்தேன். அருமை//

    நன்றி வினயூக்கி.

    //தங்களின் பாலபாரதி மற்றும் மா.சி உடனான கவிதைப் பற்றிய உரையாடல்கள் தங்களுக்கு உற்சாகத்தை நிச்சயம் கொடுத்திருக்கும்.
    //

    உண்மைதான், அவர்களோடு நடந்த உரையாடல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    By Blogger Mani - மணிமொழியன், At May 22, 2007 at 10:06 PM  

  • mikka nandri. en pathilil sila visayangkaL ungkaLukkuukkum irukkum ena nambukiren!

    By Blogger Osai Chella, At June 1, 2007 at 3:46 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home


 
Blog tracker